அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 15, 2011

இது நிஜம் தானா



சோனா, இது நிஜம் தானா?

"என்னய்யா அக்கிரமமாயிருக்கு! எவனோ ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கப்போறேண்ணு மெரட்டிக்கிட்டிருக்கான். எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறீங்களே?" என்று எரிந்து விழுந்தபடி கூட்டத்தை விலக்கியபடி முன்னேறினேன்.

"யோவ்! அவன் கையிலே தீப்பெட்டி வச்சிருக்கிறான். சட்டை பேண்டேல்லாம் மண்ணெண்ணையிலே தொப்பலா நனைஞ்சிருக்கு. பக்கத்துலே போயிராதே! நீ வேறே அசப்புலே தீக்குச்சி மாதிரியே இருக்கே!"

கொஞ்சம் பீதியாகவே இருந்தாலும், அடக்கிக்கொண்டு அவனை நோக்கி அடிமேலடி எடுத்து வைத்தேன்.

"பக்கத்துலே வர்றாதே! நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன்!"

"வரலை ராசா வரலே! அட எடுபட்ட பயலே, இப்படி கிருஷ்ணவேணி தியேட்டருக்கு முன்னாலே கிருஷ்ணாயிலை உடம்பெல்லாம் ஊத்திக்கிட்டு கையிலே தீக்குச்சியோட நிக்குறியே! எதுக்காகத் தற்கொலை பண்ணிக்கப்போறேன்னு சொல்லிட்டாவது செய்யலாமில்லே? நாளைக்கு இத வச்சு ஒரு இடுகை போட்டு நானும் பொழச்சுக்குவேனில்லே?"

"அப்படீன்னா நீதான் சேட்டைக்காரனா?"

"எப்படி ராசா கண்டுபிடிச்சே?"

"பின்னே, என்னைப் பத்தி புத்திசாலியா இடுகை போடுவாங்க?"

"சே! முதல்லே என் வாயிலே குடியிருக்கிற சனியனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பணும். அதை விடு, இப்போ எதுக்குத் தற்கொலை பண்ணிக்கப்போறே, அதைச் சொல்லு!"

"ரெண்டு நாளைக்கு முன்னாலே கலைமாமணி விருது கொடுத்தாங்க தெரியுமா சேட்டை?"

"ஓ! நல்லாத் தெரியுமே! அனுஷ்கா, தமன்னா, ஆர்யா உள்பட 74 பேருக்கு கலைமாமணி விருது கொடுத்திருக்காங்க! அதுக்கென்ன இப்போ? உனக்குக் கொடுக்க மறந்திட்டாங்களா? அதுக்காக நீ செத்துட்டா உனக்கு கலைமாமணி கிடைக்காதப்பு; தற்-கொலைமாமணி விருது தான் கிடைக்கும்!"

"சும்மாயிரு சேட்டை! வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சாதே! எனக்குக் கொடுக்காட்டியும் பரவாயில்லை! ஆனா சோனாவுக்குக் கொடுக்காம அநீதி இழைச்சிட்டாங்களே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"

"என்னது சோனாவா? யாருய்யா அது?"

"நடிகை சோனா யாருன்னா கேட்கறே? நீ அடுத்த பிறவியிலே உ.பியிலே டி.எஸ்.பியாத் தான் பொறக்கப்போறே!"

"அப்படியெல்லாம் சாபம் போட்டுராதே! என்னோட ஷூவையே நான் துடைக்கிறதில்லை; மாயாவதி ஷூவையெல்லாம் எப்படித்துடைக்கிறதாம்? சோனாவுக்கு எதுக்கு கலைமாமணி கொடுக்கணும்? அவங்களுக்கும் கலைக்கும் என்ன தொடர்பு? தெரியாமக் கேட்கிறேனப்பு...."

"என்னய்யா பெரிய தொடர்பு? எங்க சோனா ஹைடனைப் பத்தி என்னன்னு நினைச்சே? கலைஞர் வீட்டுக்குப் போயி நேருக்கு நேரா சந்திச்சு, போட்டோவெல்லாம் எடுத்திருக்காங்க தெரியுமா? இதோ பாரு!"


"அட ஆமா, அவரு வீட்டுக்கு எல்லாராலேயும் போக முடியுமா என்ன, இவ்வளவு பக்கத்துலே உட்கார்ந்துக்கிட்டு போஸெல்லாம் கொடுத்ததுக்கப்புறமும் கலைமாமணி கொடுக்கலியா? இது உண்மையிலேயே பெரிய அநீதி தானப்பு..!"

"சும்மா ஒண்ணும் போகலே! சொளையா அஞ்சுலட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கியிருக்காங்க தெரியுமா?"

"என்னது, அஞ்சு லட்சமா? அதுக்கு தமிழ்நாட்டுலே ஒரு குடும்பத்துக்கேடாக்டர் பட்டம் கிடைக்குமே?"

"டாக்டர் பட்டமெல்லாம் எங்க தலைவிக்கு எம்மாத்திரம் சேட்டை? அவங்களுக்கெல்லாம் ஒரு மரியாதையிருக்கு! அவங்க எவ்வளவு புரட்சிகரமான சிந்தனையுள்ள பெண் தெரியுமா? அவங்க வாயைத் திறந்தாப்போதும், உடனே இந்து மக்கள் கட்சி சிவசேனாவெல்லாம் போராட்டத்துலே இறங்கிருவாங்க! அவ்வளவு புதுமையான சிந்தனையுள்ள பெண்மணி அவங்க!"

"இத பாரப்பு, சிவசேனாவையெல்லாம் தமிழ்நாட்டுலே யாரும் சீரியஸா எடுத்துக்கமாட்டாங்க, இப்போ காதலர் தினம் கொண்டாடக்கூடாதுன்னு மதுரையிலே ஆர்ப்பாட்டம் பண்ணினாங்க தெரியுமா? அதுலே மொத்தமே முப்பது பேரு தான் இருந்தாங்களாம். அதுலேயும் இருபத்தி ஒன்பது பேரு போலீஸுன்னு பேசிக்கிறாங்க!"

"அப்படீன்னா புரட்சிப்பெண்களுக்கு தமிழ்நாட்டுலே மரியாதையே கிடைக்காதா?"

"எப்படிக் கிடைக்கும்? நாலு கோர்ட் ஏறி எறங்கியிருக்கணும். நாப்பது கேசு பார்த்திருக்கணும். தமிழ்ப்பண்பாடு, கலாச்சாரம், இப்படி எதுனாச்சும் பேசியிருக்கணும். அந்த மாதிரி ஏதாவது பண்ணியிருக்காங்களா?"

"ஓ! நிறையவே பேசியிருக்காங்க சேட்டை! ஆண்களை நம்பாதே ஆனால் ஆண்களில்லாமல் வாழ முடியாதுன்னெல்லாம் நிறையத் தத்துவங்களைக் கண்டுபிடிச்சுச் சொல்லியிருக்காங்க. இதுக்காகக் கூட நொந்த மக்கள் கட்சி, அதாவது இந்து மக்கள் கட்சி போராட்டமெல்லாம் நடத்தியிருக்காங்க!

"அட, இவ்வளவு பெரிய ஆளா அவங்க? ஒருவேளை தமிழ் தெரியாதுன்னு கலைமாமணி கொடுக்காம விட்டுட்டாங்களோ?"

"ஆமாம் அவங்க ஆங்கிலோ இந்தியப்பொண்ணுதான்! ஏன் கொடுக்கக்கூடாதா? தமன்னா தமிழ்ப்பொண்ணா, அனுஷ்கா தமிழ்ப்பொண்ணா? தமிழ் சினிமாவுலே நடிக்க சரக்கே வேண்டாமுன்னு சொன்னா ஆர்யா தமிழனா? அவங்களுக்கெல்லாம் கொடுக்கும்போது இவங்களுக்கும் கொடுத்தா என்னவாம் சேட்டை?"

"கரெக்டு தான்! செலவோட செலவா சோனாவுக்கும் ஒரு கலைமாமணி கொடுத்திருக்கலாம். அவங்களும் நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன் கூட போட்டோ எடுத்துக்கிட்டிருப்பாங்க! தமிழ் இலக்கியமும் வளர்ந்திருக்கும். ஒரு நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாங்க!"

"எல்லாத்தையும் கூட விட்டிரலாம் சேட்டை! ஆனா....ஆனா...," என்று குமுறிக்குமுறி அழுதார் அவர்.

"அழாம சொல்லுய்யா! இன்னும் என்ன...?"

"சோனா ஒரு தமிழ்ப்படம் எடுக்கிறாங்க! அதுக்கு ’கனிமொழி’ன்னு பேரு வச்சிருக்காங்க! அதோட பாடல்களைக் கூட கலைஞர் வெளியிடுவார்னு சொல்லிட்டிருந்தாங்க!"

"என்னது?" நான் அதிர்ந்தேன். "தம்பி, நீ கடைசியா சொன்னதைக் கேட்டதுக்கப்புறம் எனக்கே சோனா மேலே ஒரு பரிதாபம் வந்திருச்சு! ஆனா, அதுக்காக நீ சாகணுமா? நம்ம நாட்டுலே கண்டனம் தெரிவிக்க எத்தனையோ வழியிருக்கே? உதாரணத்துக்கு நம்ம மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுஹாண் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறதுக்காக, இருபது நிமிஷம் உண்ணாவிரதம் இருந்தாரு! நீங்களும் ஒரு அரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து அவரோட ரிகார்டை பிரேக் பண்ணியிருக்கலாமே?"

"அவரோட ரிகார்டை என்னாலே எப்படி பிரேக் பண்ண முடியும் சேட்டை?"

"ஏனப்பு, ஒரு அரைமணி நேரம் சாப்பிடாம இருக்க முடியாதா?"

"அது முடியும். ஆனா, அவரோட இருபது நிமிஷ உண்ணாவிரதத்துக்கு ஆன செலவு ரெண்டு கோடி ரூபாய்.அதுக்கெங்கே போவேன்?"

"ஓஹோ! இப்படியொண்ணிருக்கோ?"

"இப்போ சொல்லு சேட்டை! எங்க தலைவி சோனாவுக்கு கலைமாமணி தராதது எவ்வளோ பெரிய கொடுமை? இது தெரியாம ஜெயகாந்தன்கூட ’இது தமிழர்களுக்கு பொற்காலம்,’னு சொல்லியிருக்காரே?"

"அதையெல்லாம் சட்டை பண்ணாதீங்க! ஜெயகாந்தன் "இது எனக்கு பொற்காலம்,"னு உண்மையையா சொல்ல முடியும் பாவம்? அதான் நம்ம முதல்வரே சொல்லிட்டாரே! அடுத்தவாட்டி கலைஞர் முதல்வரானா ஒவ்வொரு வருஷமும் 225 பேருக்கு கலைமாமணி விருது தருவாராம். அப்புறம் நீயும் கலைமாமணி; நானும் கலைமாமணியாயிடுவேன்."

"ஊஹும்! அதெல்லாம் செல்லாது! எங்க தலைவிக்கு இப்பவே கலைமாமணி வேணும். இல்லாட்டா நான் சாகப்போறேன்!"

"உம் சரி, நான் இவ்வளவு சொல்லியும் கேட்கலேன்னா என்ன பண்ணுறது? சரி, உன் இஷ்டம் போல சாவு!"

"இதை முதல்லேயே சொல்லியிருக்கலாமில்லே சேட்டை? பாரு, என் டிரஸெல்லாம் காய்ஞ்சு போச்சு! இரு இன்னும் ரெண்டு பக்கெட்டிருக்கு! அதையும் ஊத்திக்கிறேன்!"

"அடக் கிறுக்கா! தீக்குளிக்கிறேன்னு சொல்லிட்டு என்னடா வாளியிலே இருக்கிற தண்ணியை தலையிலே ஊத்திக்கிறே?" நான் அதிர்ந்தேன்.

"நல்லாப் பாரு சேட்டை! ரெண்டு சிவப்பு வாளியிலேயும் என்ன எழுதியிருக்கு? ’தீ’ன்னு தானே எழுதியிருக்கு? இதோ நான் தீக்குளிக்கப்போறேன்! தீக்குளிக்கப்போறேன்!"

ஐயோ சாமீ! இம்புட்டு நேரம் ஒரு லூஸோடவா பேசிட்டிருந்தேன்?

No comments:

Post a Comment